Friday 4 December 2009

சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 பகுதி -2 சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்

சுவட்டுச் சரம் - 2
நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1

பகுதி -2


உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
(Rev. Fr. T. M.F. Long, OMI 1936 – 1954)



பாடசாலை சகல துறைகளிலும் முன்நோக்கிப் போதல் வேண்டும்:

லோங் அடிகளார் பாடசாலைக்கு ஆசிரியராக நியமனம் பெற்ற உடனடியாகவே அவருக்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் பதவியும் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருக்கப்படாது அவர்கள் முழுமையான ஆளுமை விருத்திக்கு வழி கோலுவது பாடசாலையே என்பதில் மிக்க நம்பிக்கை உடையவராக அடிகளார் இருந்தார்கள். ஆகவே அவர் அதிபர் பதவி ஏற்ற பின்னர் பாடசாலையினது விளையாட்டுத்துறை மாத்திரமல்லாமல் கலை இலக்கியத் துறையிலும் அதீத முன்னேற்றம் காட்டினார். அக்காலத்தில் யாழ் பிரதான வீதியில் புனித மார்டீனார் குரு மடவளாகத்தில் தான் விளையாட்டு அரங்கு அமைந்திருந்தது. அங்கு தான் பயிற்சிகளும் போட்டிகளும் நடாத்தப்பட்டன. இதன் பயனாக கல்லூரி தேசிய ரீதியில் பல போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிகளைப் பெறக் கூடியதாக இருந்தது. கொழும்பில் நடந்த மெய்வல்லுனர் போட்டியில் முதல் தடவையாக எம் கல்லூரி மாணவர்கள் மெய்வல்லுனர்ப் போட்டிகளில் சாதனை படைத்தார்கள்’ என கல்லூரியின் பழைய மாணவர் R.L. Xavier கூறியதுடன் ஆபிரிக்காவின் உகண்டாவினைச் சேர்ந்த கல்லூரிப் பழைய மாணவர் Benching Kibuka சர்வதேச இரீதியிலும் புகழ் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தினை பெற்று Triple Crown சாதனையாளராகியது.

அடிகளார் சம்பத்திரிசியார் கல்லூரியின் அதிபராயிருந்த காலத்திலே யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சங்கைக்குரிய பங்கர் அவர்கள். இருவருக்குமிடையே அந்நியோன்ய பாசம் இருந்தது. அதன் காரணமாக இரு பாடசாலைகளுக்குமிடையே ஆண்டு தோறும் துடுப்பாட்டம் மற்றும் உதைபங்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன "Battle of the Golds" எனும் தலைப்புடன் பழைய மாணவர்கள் பொதுமக்களைக் கவரும் போட்டிகளாக அவை அமைந்தன.

ஒழுங்காட்சியில் அதீத கவனமுடைய அடிகளார் விளையாட்டில் முறைகேடுகளை முற்றாகவே வெறுத்தவர். எப்படியாக எமது அணியினரின் சிறப்பான ஆட்டத்தை நாம் கரகோசம் செய்து பாராட்டுகின்றோமோ அதே போன்று எதிரணியினரையும் பராட்ட வேண்டும் என வகுப்புகளுக்கு சுற்றறிக்கை மூலம் போட்டிக் காலங்களில் அறிவிக்கத் தவறமாட்டார். அக்காலத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியின் படைப்பயிற்சி மாணவர் குழு (Cadets) மிகவும் பிரபலமாயிருந்தது.


கனவு மெயப்படவேண்டும் காரியமாவது விரைவில் வேண்டும்:

பலரது கனவுகள் கனவாகவே முடிந்து விடுவதுண்டு ஆனால் அடிகளாரின் கனவு சாதனையில் தான் முடியும். ஏனென்றால் எண்ணியது எண்ணியாங்கு எய்தும் திண்ணியர் அவர். அவரது பல முயற்சிகளுக்கு யாழ் மக்களினது பங்களிப்பினை முழுமையாக அவரால் பெற முடிந்தது. மக்களுக்கும் சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக களியாட்ட விழாக்களை ஒழுங்கு செய்தார். 1938 மற்றும் 1941 ஆண்டுகளில் நடந்ததாக நான் அறிந்தவற்றில் தென்னகத் திரை நட்சத்திரங்களான N.S. கிருஸ்ணன், T.A மதுரம் போன்றோரையும் அந்தக்காலத்தில் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களாயிருந்த கிங்கொங் மற்றும் தாரசிங் போன்றோரையும் அழைத்து மக்களின் ரசனைக்கு ஊட்டம் கொடுத்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது. பணமும் தாராளமாகச் சேர்ந்தது. அடிகளாரும் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. பாடசாலையின் நூலகம் தரம் உயர்ந்தது, ஆய்கூடங்கள் புதுப்பொலிவு பெற்றன, விளையாட்டு மைதானம் விசாலமானது.
அடிகளார் அவர்கள் அதிபர் பதவி ஏற்ற முதல் எட்டு ஆண்டுகள் இரண்டாவது உலக மகாயுத்தகாலமானமையால் அவர் வகுத்த பல செயல் திட்டங்களை நிறைவேற்றுதல் கடினமாகவே இருந்தது. யுத்தம் முடிந்த உடனடியாகவே மூன்றடுக்கு மாளிகை ஒன்றினைக்கட்டி எழுப்பி அதனை ‘மத்தியூஸ் நினைவக்கட்டிடம்’ எனப் பெயரிட்டு அவரது நினைவினைப் போற்றினார்.

பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் யாபேரும் உயர் கல்வி பெறுவதில்லை அல்லது ஏதாயினும் தொழில் பெறுவதற்கான கல்வியைப் பெறுவதும் இல்லை. ஒரு தொகையினர் ஏதேதோ காரணங்களுக்காகப் பாடசாலையிலிருந்து விலகி விடுகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியலில் முன்னேறுவதற்கு என்ன செய்யலாம்? எப்படி உதவலாம்? என்பது பற்றித் தீவிரமாக அடிகளார் சிந்தித்தார். அதன் விளைவு? யாழ்ப்பாண சமூகம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் ஆனால் பொதுவாக யாபேரும் சிறு விவசாயிகளே. அவர்களது விவசாயம் சம்பந்தமான அறிவினை மேம்படுத்துவதால் அவர்களுக்குச் சிறப்பான வாழ்கையை அமைக்க உதவும் என்பதை உணர்ந்த அடிகளார் கிளிநொச்சியில் 100 ஏக்கர் வரை நிலம் வாங்கி அங்கே ஒரு விவசாயக் கல்லூரியை நிறுவினார். பாடசாலையை விட்டு இடைநீங்குகின்ற மாணவர்கள் பற்றிய கவலையும் அடிகளாருக்கு இருந்தமையால் தொழில் நுட்பக் கல்வியாக மோட்டார் தொழில் நுட்பத்தினையும் பாடசாலையில் போதிப்பதற்கு வழிவகுத்தார்.

1950ஆம் ஆண்டினிலே கல்லூரியினது நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகிய D.S சேனநாயகா அவர்கள் விழாவினில் பங்கேற்றுச் சிறப்பித்தார். கொழும்பிலே உள்ள “Aquinas College” போன்ற உயர் கல்வி வசதிகளுடைய "பெரிய சம்பத்திரிசியார்" என்ற ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கனவுடனேயே அடிகளார் வாழ்ந்தார். அதனைச் செயற்படுத்தும் வண்ணமாக யாழ் நகரிலே ஒரு களியாட்ட விழா எற்பாடு செய்து பணம் சேர்த்தார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் சென்று போதிய நிதியினைச் சேகரித்து வந்தார்” என்கிறார் சேவியர் அவர்கள். “கோயில் கட்ட அந்த நிதியினைத் தருமாறு கேட்கப்பட்டது. "College money is for College" என்று கூறிய லோங்; அடிகளார் அதனைக் கொடுக்க மறுத்தமை யாழ் வாழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அன்று பெரிதாகப் பேசப்பட்டது. லோங் அடிகளார் சொல்லாலும் செயலாலும் பாதிப்புற்ற போதும், உயர்ந்த கற்பகதரு விருட்சமாகவே யாபேருக்கும் காட்சி அளிக்கிறார்.” என்கிறார் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள்.


பாடசாலையின் தொடர்ச்சியே சமூகம்:

உலகமகாயுத்தம் நடைபெற்ற சமயத்திலே RAF என அழைக்கப்படும் இங்கிலாந்து அரசினது விமானப் படையினரின் உபயோகத்திற்கென பலாலியில் விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டது. போர் முடிவுற்றதும் இந்ததளத்தினை மூடி விட முடிவு செய்தபோது லோங் அடிகளார் தான் தனது நண்பராயிருந்த A.R வார்டில் அவர்களிடமும், அன்றைய ஆளுனரிடமும் பேசி அந்த விமான தளத்தினை தொடர்ந்தும் இயங்க வைத்தார். இதன் மூலமாக யாழ் மக்கள் இந்தியாவின் திருச்சி, மற்றும் கொழும்பிற்குச் சுலபமாகச் சென்று வர முடிந்தது.

மாணவர்களுடைய அறிவு விருத்திக்கு ஆசிரியர் போதிப்பது மாத்திரம் போதாது. அவர்கள், சிறப்பாக உயர்தர மாணவர்கள், மேலும் பல தகவல்களைப் பெறவேண்டும். அதனை வழங்குவற்கு ஒரு சிறந்த நூலகம் அமைய வேண்டும் என்பதை உணர்ந்த அடிகளார் அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த நூல்களைப் பெற்று பாடசாலையின் நூல்நிலையத்தின் தரத்தினைப் பெரிதும் உயர்த்தினார். ஓவ்வொரு வகுப்பறையிலும் “Read a book A Week” என்று அட்டையில் எழுதித் தொங்க வைத்தார். பிள்ளையினது முழுமையான ஆழுமை வளர்ச்சிக்கு பாடசாலை எந்த அளவிற்கு உதவுகிறதோ அந்த அளவினுக்குக் குடும்பமும் உதவுகிறது. பெற்றோர்களில் பலர் பாடசாலைக் கல்வியைப் பெறக் கூடிய வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வி கற்பதாயின் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. அது எத்தனை பெற்றோர்களுக்குச் சாத்தியமாயிற்று. ஆகவே பலபெற்றோர் ஒரளவு தமிழ்ப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்தி தமது குலத்தொழிலினையே செய்து வாழக்கையை ஓட்டினர். இவர்களது உலகளாவிய அறிவினை வளர்த்தால் தான் அவர்களது குலக்கொழுந்துகள் அறிவார்ந்த சூழலில் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தவர் அடிகளார். சமூகத்தினைச் சார்ந்தோர் அத்தனை பேருக்குமே ஒரு சிறந்த நூலகம் இன்றியமையாதது எனக் கருதிய லோங் அடிகளார் யாழ் நூல் நிலையம் அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். அன்றைய யாழ்நகர பிதாவாக இருந்த சாம் A. சபாபதியுடனும் இன்னும் பல அறிவு ஜீவிகளுடனும் இணைந்து யாழ் பொதுநூலகக் குழு அமைத்து ஒரு கோடி ரூபா நிதி சேகரிப்பதற்கு முன்னின்று உழைத்தார். தமிழகத்தின் பிரபல கட்டிடக்கலை வல்லுனர் கலாநிதி. இராமநாதன் அவர்களின் தொண்டினை நாடிப் பெற்றதுடன் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒரு பெரும் தொகை பணத்தினையும் நன்கொடையாகப் பெற்றுத் கொடுத்தார். அவரது சேவை யாழ் மக்களினது உள்ளத்தில் எத்தனை தூரம் இடம் பெற்றுள்ளது என்பதை அவரது உருவச்சிலை யாழ் பொது நூலக முன்றில் அழகோச்சியபடி நிற்பதில் இருந்து கண்டு கொள்ள முடியும்.

2006 மே மாதம் 26ந்தேதி அருட்தந்தை ஞாபகர்த்மாக நிறுவப்பட் மூன்று மாடிக்கட்டிடம் திறந்து வைக்கப் பட்டமை அப் பெரியவரின் நினைவு அவரது பழையமாணவர்களிடம் என்றும் பசுமையாக இருக்கும் என்பதனை நிலை நாட்டியுள்ளது.


அவர் பெருமை முழு இலங்கைக்குத் தெரியவந்தது:

அவரது நிர்வாகத் திறமையும், மாணவர்கள் மேலுள்ள அக்கறை சேர்ந்த கவனிப்பும் எல்லோராலும் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தென்னிலங்கையிலுமிருந்து மாணவர்கள் கல்லூரியில் வந்து விடுதிச் சாலையில் தங்கிக் கல்வி கற்றார்கள். அவர்களில் பலர் பல உயர் பதவிகளைச் சுதந்திர இலங்கையில் வகித்துள்ளனர். E.L.B ஹறுள்ளை U.N.P அரசாங்கத்தில் அமைச்சராகவும் பின்னர் ஸ்ரீலங்காவின் தூதராக ஆஸ்திரேலியாவிலும் கடமையாற்றி அடிகளாரின் பெருமைக்கு உதாரணரானார்கள். 1945ஆம் ஆண்டினிலே அடிகளாரது ஆசிரியப் பணியின் வெள்ளி விழா கொண்டாடப்பட்ட போது "Times of Ceylon” என்ற பத்திரிகை “ Fr. Long has fulfilled his task as Rector of St. Patrick’s in so much a fashion that the school ranks as one of the finest in the country, Students come from Colombo, Kandy and other areas to St. Patrick’s on account of the special “tone” this excellent school imparts to its pupil.. For one setting of that ‘tone’ the Rector is chiefly responsible” என எழுதியிருந்தது. . Collette என்பவர் அந்நாளில் Daily News பத்திரிகையின் பிரபல கேலிச் சித்திர கலைஞர். அகில இலங்கையிலும் பெயர் பெற்ற லோங் அடிகளார் கொல்லெற்றின் கண்களுக்குத் தவறவில்லை. அவரை வேட்டி சால்வை அணிந்தவராகக் கேலிச்சித்திரம வரைந்து "Jaffna man of Irish Origin” எனத்தலைப்பு இட்டிருந்தமை அடிகளார் தன்னை எந்த அளவினுக்கு யாழ்ப்பாணத்தவனாக ஆக்கிக் கொண்டார் என்பதற்கு எடுத்துக் காட்டு. அடிகளார் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண:டு பணம் திரட்டி வந்த போது, "Oh,Oh, Look Out, America" என்ற தலைப்பிலும் அடிகளார் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது “He Comes From Jaffna”: என்ற தலைப்பினிலும் கேலிச் சித்திரம் வரைந்தருந்தார். இடமாற்றம் பெற்றதற்கான கேலிச்சித்திரத்தில் ஒரு தலைப்பாகை அணிந்தவராகக் காதிலே கடுக்கன் ஒருகையினில் குடையும் மறு கையினில் முருங்கைக்காய் கட்டுடன் ஆஸ்திரேலியா எனக் குறிக்கப்பட்ட சூட்கேசுடனும் அடிகளை வரைந்திருந்தார்.

“சுகாதாரத்துறையில் பதவி ஒன்றினுக்காக எழுத்துப் பரீட்சையில் சித்தி எய்திய பின்னர் நேர்முகப் பரீட்சையினுக்குத் தோன்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில் கல்விச் சான்றிதழுடன் இரண்டு நற்சான்றிதழ்களும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சுகாதார இலாகாவில் இரண்டு உயர் அதிகாரிகள் என்னை நேர்கண்டனர் அவர்கள் என்னிடம் முதல் கேட்ட கேள்வி “நீர் எங்கு கல்வி கற்றீர்?" என்பதே. நான் பதில் கூறியதும் எனது சான்றிதழ்களைப் பெற்றவர்கள் முதலில் இருந்த லோங் அடிகளாரின் சான்றிதழினை வாசித்ததும், மேலே ஒன்றினையும் பார்க்காமல் புன்சிரிப்புடன் ‘சரி; நீர் போய் வாரும் என்றனர்’. பின்னர்தான் தெரிந்தது அந்த உயர் அதிகாரிகளில்; ஒருவர் அருட் தந்தை லோங் அடிகளாரின் மாணவர் என்பது” என சம்பதிரியார் கல்லூரியின் பழைய மாணவர் றாபியல் சேவியர் அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.


அவர் பிரிவை ஒவ்வொருவரும் அனுபவித்தனர்:

அல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் லோங் அடிகளாரது குறைபாடாக ஒரு குறைபாட்டினைக் குறிப்பிடுவது ஆச்சரியத்தைத் தருகிறது. ”அடிகளார் அவர்கள் ஒதுங்கியே வாழ்ந்தது மனவருவருத்தமானது. அவர் மாணவர்களையும் பெற்றோர்களையும் கொஞ்சம் தூரத்திலேயே வைத்திருந்தார். அவருக்கு நெருக்கமான சில ஆசிரியர்கள் தவிர ஏனையவர்களுடனும் சமூகத்தினருடனும் அவர் அவ்வளவாகப் பழகியதாகத் தெரியவில்லை” என அல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் கற்ற காலம் லோங் அடிகளார் அதிபர் பதவி ஏற்ற ஆரம்பகாலம் ஆகவே அன்றைய அடிகளார் பற்றிய கருத்தாக இது அமையலாம்.
அருட் தந்தை ரி.எம்.எப் லோங் அவர்கள் 1954 இல் .இடமாற்றம் பெற்று ஆஸ்திரேலியாவுக்குப் போக வேண்டி வந்தது. கல்லூரி வளர்ச்சிக்கு மேலும் பல திட்டங்கள் வகுத்து அவற்றினுக்குச் செயல் வடிவு கொடுக்க முற்பட்ட வேளையில் வந்த இடமாற்றத்தைக் கேள்வியுற்ற பழைய மாணவர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மிகவம் அதிர்ச்சி அடைந்தனர். அடிகளாரை ஆஸ்திரேலியாவின் குருமார்களுக்குப் பயிற்சி தரும் ஒரு மதபாடசாலையினுக்கு அனுப்பியிருந்தார்கள். என்றுமே தமது உரைகளின் போது ‘யாழப்பாணம், நாம் தமிழர்’ என யாழ் மக்களைத் தனது உடன் பிறப்பாகக் கருதிய ஆடிகளார் ஆஸ்திரேலியா சென்றாலும் அவரது உள்ளமும் உயிரும் என்றுமே யாழ்ப்பாணத்தினை விட்டு அகல மறுத்தது. கத்தோலிக்க திருச்சபையினுக்கும் அடிகளாருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிகளாரின் சேவை கல்லூரியினுக்குத் தேவையில்லை என மேலிடத்திற்கு அறிவிக்கப்பட்டமையே தான் அடிகளாரின் இடமாறற்த்திற்குக் காரணமானது எனப் பேசப்பட்டது.

மிகப் பெரிய பிரியாவிடை ஒன்று வழங்கப்பட்டது அப்பொழுது கல்லூரி அவருக்கு பிரியாவிடை எடுத்தது. அதில் கல்லூரி ஆசிரிய மாணவர்களுடன் முழுக் கத்தோலிக்க சமூகம் மாத்திரமல்லாமல் ஏனைய சமூகங்களும் ஒருமித்த பங்கு பற்றியதென்றே கூறவேணடும். விழாவினுக்கு அமைக்கப்பட்ட மேடையின் பிற்புறத்தினில் 'Long Live Fr. Long’ என எழுதப்பட்ட பதாகை துலாபரமாகக் காட்சியளித்தது. அடிகளாருக்கு யாழ்நகரின் பிரபல சைவப்பெரியார் ஆள் உயரமான மாலையிட்டமை அவர் யாழ்பாணசமூகத்தவர் எல்லோரதும் அபிமானத்துக்குரியவர் என்பதைக் காட்டியது. அத்துடன் முழுச் சமூகமுமே அவரை புகையிரத நிலையத்திற்குக் கூட்டிச் சென்று வழியனுப்பியது. மக்கள் தொகையினால் புகையிரத நிலையமே நிரம்பி வழிந்தது அந்தளவிற்கு அவர் சமூகத்திலும் பிரபல்யம் அடைந்திருந்தார். லோங் அடிகளார் உயிர் வாழ்ந்த 66 வருடங்களில் 34 வருடங்களை யாழ்ப்பாணத்து மாணவர்களின் நலனுக்காகவும் யாழ் சமூகத்தின் உயர்வுக்காகவும் அரும் பணியற்றியதை எவரும் மறப்பதற்கில்லை. அவரது சேவை நலத்தினை இலங்கை அரசாங்கமே கௌரவிக்கு முகமாக 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் தபால் திணைக்களம் நினைவு முத்திரை ஒன்றினை அன்றைய ஜனாதிபதி கௌரவ சு. பிரேமதாசா அவர்களால் வெளியிட்டது. வெளியீட்டு விழா யாழ்நகரிலும் கெர்ழும்பு மாநகரிலும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.

அடிகளார் ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரினில் தனது கல்விப் பணியினைத் தொடர்ந்தார். அங்கே Iona College எனும் ஒரு பாடசாலையை அமைத்து சேவையாற்றிய சமயத்தில் அவரது கண் பார்வையில் பிரச்சினை வந்தபோது அதனை நிவர்ப்பிப்பதற்காக கெர்ழும்பினுக்குதான் அடிகளார் வந்தார். இங்கே அவரது மாணவர் கண்வைத்தியர் சிவசுப்பிரமணியத்தினைக் கொண்டு அறுவை வைத்தியம் செய்து குறைபாட்டினை நிவர்த்தி செய்த பின்னர் மீண்டும்; ஆஸ்திரேலியா சென்றாராம். அங்கு நோய்வாய்ப்பட்டமையால் இங்கிலாந்து திரும்பினார். அவர் எங்கு வாழ்ந்தாலும் அவரது இதயம் யாழப்பாணத்திலதான் இருந்தது எனபதை அவர் மரணிக்கச் சில வாரங்களுக்கு முன்னர் தன்னை உபாசிக்கும் ஒரு "மகனுக்கு” எழுதிய கடிதத்தில், “தனது சொந்த மண்ணிலே உள்ள வளர்ந்த ஒரு மரத்தினை வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தினில் நடப்பட்டது போல நான் உணர்கிறேன். நான் இன்னும் வாழவேண்டும் என கடவுளிடம் பிரார்த்தியுங்கள்” என எழுதியிருந்தமையைக் கண்டு உணரமுடிகிறது. ஆனால் கடவுளுக்கு அத்தனை பொறுமை இல்லையோ? இலண்டன் மாநகரத்தில் உள்ள மருத்துவ மனை ஒன்றினில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருக்கையிலேயே அடிகளாரை 30-04-1961ல் அழைத்துக் கொண்டார்.


- பொ. கனகசபாபதி
*****************

*****************

தகவல் உதவிக்கு நன்றிக்குரியோர்:
Dedication Very Rev, Fr, T,M,F Long O.M.I S.P.C Alumni Association. U.K
பொன்மாலை - 150 Years in Education. St. Patrick’s College Alumni Association, Canada.
M.S. அலெக்சாந்தர் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,
செல்வா இலங்கையன். முன்னாள் ஆசிரியர், ஓய்வு பெற்ற விஞ்ஞான கல்வி அதிகாரி R..L சேவியர் அவர்கள்

தொடர்புகளுக்கு: P.Kanagasabapathy
Tel: 415- 283 -1544(கனடா) e.mail: pkanex@hotmail.com


பிற்குறிப்பு:
Rev. Fr. Timothy M.F. Long, OMI (1936 – 1954)
The Age of Fr. Long were years of Grandeur at St. Patrick’s. The magic personality of Fr. Long could make possible what seemed impossible. Fr. Long’s period was one of scintillating activity. It was the period of Carnivals, Exhibitions, Pageantry and open-air Passion plays. In sports, our teams emerged invincible on the playing fields. In studies, the brilliant feats of the earlier period remained untarnished. The Matthews Block will be a constant reminder of his hard work. He was the architect of an excellent library at St. Patrick’s and the driving force behind the Jaffna public library. In 1990 the Government of Sri Lanka recognized him as a “National Hero” and issued a stamp, enshrining the memory of his contribution to the society at large. In 1961 on the 30th of April he passed away to enjoy Eternal Glory.

http://www.stpatrickscollege.edu.lk/past%20rectors.htm

2 comments:

  1. சமீபத்தில் வாசித்த பதிவுகளில் இது மிகவும் கவனத்துக்குரியதொன்று. ஈழத்தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றியுள்ள வரலாற்றாளர்களைப் பதிவாக்கும் தங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியதொன்று.
    கல்வி மட்டத்தில் தாங்கள் செய்வதுபோல் பல்வேறு சமூக மட்டங்களின் இயங்குதலுக்கு அர்ப்பணித்த பல்வேறு பதிவுகள் வெளிவருதல் வேண்டும்.
    - அருந்தா

    ReplyDelete
  2. நன்றி அருந்தா, இதன் தொடர்ச்சியாக கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னைநாள் அதிபர் ஹண்டி எஸ் பேரின்பநாயகம் அவர்கள் தொடர்பான பதிவு இடம்பெறவுள்ளது.
    - முகிலன்

    ReplyDelete